<$BlogRSDURL$>

Thursday, July 27, 2006

பாகற்காய் பிரியாணி/ ஆனியன் பிரியாணி / நொய் பாயசம் 

பாகற்காய் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி ஒரு கப், பாகற்காய் (நடுத்தர சைஸ்) amp; 1, பெரிய வெங்காயம் 2, பால் ஒரு கப், எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது 2 டீஸ்பூன், உப்பு தேவையானது, புதினா, மல்லித்தழை தலா சிறிதளவு, வினிகர் 2 டீஸ்பூன். தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியைக் கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊற வையுங்கள். பாகற்காயை வில்லைகளாகவும் வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். பாகற்காயில் வினிகரையும் ஒரு சிட்டிகை உப்பையும் கலந்து பிசறி வையுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை பொரிந்ததும் பாகற்காயைப் பிழிந்து போட்டு சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, உப்பு, பால், பாசுமதி அரிசி (தண்ணீருடன்), எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாகப் பரிமாறுங்கள். பாகற்காய்க்கே உரிய கசப்பு லேசாக இருந்தாலும், ‘இது வரை இப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டதே இல்லை’ என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள் சாப்பிட்டவர்கள்.

ஆனியன் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், சின்ன வெங்காயம் 15, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 3, பால் ஒரு கப், உப்பு தேவையான அளவு. தாளிக்க: பட்டை ஒரு துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், நெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியைக் கழுவி ஒரு கப் தண்ணீர், பால் சேர்த்து ஊற வையுங்கள். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து இரண்டு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து சிட்டிகை உப்பு சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்குங்கள். இவை வதங்கியதும் அரிசியை, ஊற வைத்த பால் + தண்ணீருடன் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு ஒரு விசில் வந்ததும், தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறுங்கள்.

நொய் பாயசம்

தேவையானவை: பச்சரிசி நொய் அரை கப், கெட்டியான தேங்காய்ப்பால் ஒரு கப், வெல்லம் (பொடித்தது) ஒன்றரை கப் (பாகு வெல்லமாக இருந்தால், ஒன்றேகால் கப்), நெய் கால் கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்.

செய்முறை:

மூன்று கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அரிசி நொய்யை சேருங்கள். சிறுதீயில், நன்கு குழைய வேகவிடுங்கள். இன்னொரு அடுப்பில், வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, வெந்து கொண்டிருக்கும் நொய்யுடன் சேருங்கள். விடாமல் கிளறி, அவ்வப்போது சிறிது நெய்யும் சேருங்கள். நன்கு வெந்து, பாகு வாசனை வரும்போது கீழே இறக்கி, மீதமுள்ள நெய், தேங்காய்ப்பால், ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறுங்கள். குறிப்பு: நொய் வேகும்வரை விடாமல் கிளறவேண்டும். இல்லையெனில் கட்டிபடும். இறக்கும்போது கெட்டியாக இருந்தால், தேவையான அளவு கொதிக்கும் நீரை சேர்த்துக்கொள்ளலாம்.

This page is powered by Blogger. Isn't yours?