<$BlogRSDURL$>

Wednesday, April 19, 2006

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பட்டுவா 



தேவையானவை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1 கிலோ, அரிசி மாவு 6 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் விதைகள் 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை அரை கப், தண்ணீர் கால் கப், டால்டா அல்லது நெய் தேவையான அளவு, ரோஸ் எஸன்ஸ் சில துளிகள்.

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி மாவைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி, அப்படியே உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டி, அவற்றில் ஏலக்காய் விதைகளைப் பதித்து வைக்கவும்.

சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். ரோஸ் எஸன்ஸ் விட்டு கலக்கவும்.
வாணலியில் டால்டா விட்டு காய்ந்த உடன், தட்டி வைத்தவற்றைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அவற்றை சர்க்கரை பாகில் போட்டு சிறிது ஊறியவுடன் எடுத்து பரிமாறவும்.

ஸ்டஃப்ட் தால் 


தேவையானவை:

கோதுமை மாவு 2 கப், சோள மாவு கால் கப், பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலைப்பருப்பு 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் கால் கப் அல்லது எண்ணெய் தேவையான அளவு, வெந்நீர் தேவையான அளவு.


செய்முறை:

பச்சை மிளகாயை விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வேக வைத்த கடலைப்பருப்பு, உப்பு, லேசாக சுட வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசையவும். கடைசியில் லேசாக எண்ணெய் விட்டு பிசைந்து அரை மணி நேரம் அதன் மீது ஒரு பாத்திரமோ அல்லது மெலிதான துணியையோ போட்டு மூடி வைக்கவும்.

பிறகு பிசைந்து வைத்த மாவை திரட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெயை மாவைச் சுற்றி லேசாக விட்டு அடுப்பை சின்னதாக வைத்து ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் போட்டு மீண்டும் லேசாக நெய்யோ அல்லது எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இது குழந்தைகள் விரும்பக்கூடிய வித்தியாசமான சப்பாத்தியாகும். இதற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரிக்காய் ராய்தா சரியான தேர்வாக இருக்கும்.

கடலைப்பருப்பு பிடிக்காதவர்கள் பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளலாம். ஆனால், குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேக வையுங்கள்.

சில்லி பனீர் 


தேவையானவை:

பனீர் (or Tofu or bean curd) 200 கிராம், கார்ன் மாவு 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 2, பூண்டு 4 பற்கள், பச்சை மிளகாய் 3, குட மிளகாய் 2, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, மிளகுத்தூள் அரை டீஸ்பூன், சோயா சாஸ் 2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள்ஸ்பூன், அஜினோமோட்டா சிறிதளவு, சில்லி சாஸ் 1 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

பனீரை டைமண்ட் வடிவமாக வெட்டி சிறிதளவு கார்ன் மாவில் பிசறி வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் பனீரை பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும். மீதி உள்ள கார்ன் மாவை கால் கப் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
வெங்காயத்தை நான்காக வெட்டி தனித்தனியே உதிர்த்து வைக்கவும். குட மிளகாயையும், இதே அளவில் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். பூண்டு பற்களை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.

எண்ணெய் 2 ஸ்பூன் சூடானவுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சாஸ்வகைகள், அஜினோமோட்டோ கலந்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது கார்ன் மாவு தண்ணீரை கலந்து பனீர், காய்கறிகள் சேர்ந்தாற்போல் கெட்டியாக ஆனவுடன் இறக்கவும். இதற்கு ஆலிவ் எண்ணெய் உபயோகித்தால் நன்றாக இருக்கும்.

Monday, April 10, 2006

30 வகை பஜ்ஜிபக்கோடா! 

ஏப்ரல் வந்தாச்சு... பள்ளிகளில் விடுமுறையும் விட்டாச்சு! குழந்தைகள் எல்லாம் லூட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டில் இருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது நொறுக்ஸ் தேவையாக இருக்கும். கடையில் வாங்கும் ஸ்நாக்ஸை விட, நாமே வீட்டில் செய்யும் ஸ்நாக்ஸால் செலவும் குறைவு. குடும்பத்தவரின் உடல்நலனுக்கும் கெடுதல் இல்லை. உங்கள் சௌகரியத்துக்காகவே, சௌசௌ பஜ்ஜி, கார்ன் பக்கோடா, பிரெட் பக்கோடா என்று 30 வகை பஜ்ஜி பக்கோடாக்களை எளிய முறையில் வழங்கியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். தினம் ஒரு ஸ்நாக்ஸாக, வீட்டிலேயே வெரைட்டியாக செய்து கொடுத்து அசத்துங்கள். செலவையும் மிச்சம் பிடியுங்கள்.


ஆப்பிள் பஜ்ஜி

தேவையானவை:

ஆப்பிள் 1, கடலை மாவு 1 கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால்) 1 டீஸ்பூன், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதை நீக்குங்கள். மாவுடன், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.

புதினா, மல்லி பக்கோடா

தேவையானவை:

புதினா 1 கட்டு, மல்லித்தழை 1 சிறிய கட்டு, கடலை மாவு 1 கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, சோம்பு 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப் போட்டு வேகவிட்டெடுங்கள். (குறிப்பு: தேவையானால் தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறலாம்).

வெங்காய பஜ்ஜி

தேவையானவை:

வெங்காயம் 3, கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்தி எடுத்து காயும் எண்ணெயில் போடுங்கள். இருபுறமும் திருப்பி வேகவிட்டெடுங்கள்.

குறிப்புகள்: உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம்.

கடலைப்பருப்பு 2 கப், பச்சரிசி கால் கப், காய்ந்த மிளகாய் 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.
எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.

வெண்டைக்காய் பக்கோடா

தேவையானவை:

வெண்டைக்காய் கால் கிலோ, கடலை மாவு ஒன்றேகால் கப், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவி துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசறிய மாவில் சிறிது தண்ணீர் தெளித்து, சேர்ந்தாற்போல் மீண்டும் பிசறி, காயும் எண்ணெயில் கிள்ளிப் போடுங்கள். விருப்பம் உள்ளவர்கள், கொஞ்சம் பூண்டை நசுக்கியும் சில சின்ன வெங்காயத்தை தட்டியும் சேர்க்கலாம். சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

சௌசௌ பஜ்ஜி

தேவையானவை:

சௌசௌ (சிறியதாக) 1 , கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மைதா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், ஆப்ப சோடா 1 சிட்டிகை, மிளகாய்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

சௌசௌவை தோல், விதை நீக்கி வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை மாவுடன் ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சௌசௌ துண்டுகளை மாவில் நன்கு நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள். வித்தியாசமான பஜ்ஜி இது.

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை:

வேர்க்கடலைப் பருப்பு (வறுக்காதது) 2 கப், கடலை மாவு ஒன்றேகால் கப், அரிசி மாவு கால் கப், மிளகாய்தூள் இரண்டரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் (அல்லது) இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வேர்க்கடலையுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் (அல்லது) இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள்.

உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையானவை:

உருளைக்கிழங்கு (சற்று பெரியதாக) 2 , கடலை மாவு 1 கப், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், இட்லி மாவு 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா அரை சிட்டிகை.

செய்முறை:

கிழங்கை தோல் சீவி சற்று மெல்லிய வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். உருளை வில்லைகளை ஒவ்வொன்றாக மாவில் போட்டெடுத்து காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.

பாசிப்பருப்பு பக்கோடா

தேவையானவை:

பாசிப்பருப்பு 1 கப், தனியா 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பருப்பை சற்றுக் கரகரப்பாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவிட்டு, சிறுசிறு உருண்டைகளாக வேகவிட்டு எடுங்கள்.
இது வட இந்தியர்களின் ஃபேவரிட் பக்கோடா. இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை சட்னியும், இனிப்பு சட்னியும் நல்ல சைட்டிஷ்கள்.

வாழைக்காய் பஜ்ஜி

தேவையானவை:

வாழைக்காய் 1, கடலை மாவு 1 கப், கார்ன்ஃப்ளவர் 1 டேபிள்ஸ்பூன், சோம்பு தூள் அரை டீஸ்பூன், பூண்டு விழுது 1 டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா சிட்டிகை

செய்முறை:

வாழைக்காயின் இரு பக்கங்களிலும் சிறிது தோலை விட்டு விட்டு மீதமுள்ளதை சீவி எடுத்து விடுங்கள். பின் நீளவாக்கில் இரண்டாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிறிது தோல் இருக்குமாறு விட்டுவிட்டு, மெல்லியதாக நறுக்குங்கள்.
எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து ஒவ்வொரு துண்டையும் மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். தேங்காய் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.

கடலைப் பருப்பு பக்கோடா

தேவையானவை:

கடலைப் பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, பூண்டு 4 பல், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை தலா சிறிதளவு, சோம்பு அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள். சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா மூன்றையும் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருட்களை கலந்து பிசறி, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு, வேகவிட்டெடுங்கள். சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது.

கத்தரிக்காய் பஜ்ஜி

தேவையானவை:

பெரிய கத்தரிக்காய் 1, கடலை மாவு 1 கப், மைதா மாவு 1 டீஸ்பூன், அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா அரை சிட்டிகை.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன்.

செய்முறை:

கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள். கடலை மாவுடன் உப்பு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு துண்டையும் மாவில் அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

மெது பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு 1 கப், பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, நெய் அல்லது டால்டா 2 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். டால்டா, எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக பிசறிக்கொள்ளுங்கள். டால்டாவை உருக்கி சூடாக மாவில் சேர்த்துப் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். சிறிதளவு தண்ணீரை மாவில் தெளித்து, சேர்ந்தாற்போல பிசறி, காயும் எண்ணெயில் உதிர்த்து விடுங்கள். நன்கு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

கொத்தவரங்காய் பஜ்ஜி

தேவையானவை:

பிஞ்சு கொத்தவரை 100 கிராம், கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, ஆப்ப சோடா அரை சிட்டிகை.

செய்முறை:

கொத்தவரங்காயை நுனியையும் காம்பையும் கிள்ளிவிட்டு, அலசுங்கள். 3 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சிறிது உப்பு, கொத்தவரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள். ஒரு பேப்பரையோ அல்லது துணியையோ விரித்து, அதன் மேல் காயைக் கொட்டி விரித்துவிட்டு அரை மணி நேரம் உலர விடுங்கள். மாவுடன் மிளகாய்தூள், உப்பு, பெருங்காயம், ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்துகொள்ளுங்கள். கொத்தவரையை மாவில் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள்.

உதிர் வெங்காய பஜ்ஜி

தேவையானவை:

கடலை மாவு 1 கப், பெரிய வெங்காயம் 4, சீரகம் அரை டீஸ்பூன், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை தோல்நீக்கி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாவுடன் சீரகம், மிளகாய்தூள், உப்பு, ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரையுங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து, வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசறி, எண்ணெயை நன்கு காயவைத்து, சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு, பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.

தூள் பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு 1 கப், அரிசி மாவு கால் கப், பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தழை சிறிது, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, பூண்டு 6 பல்.
செய்முறை: மெது பக்கோடாவுக்கான செய்முறையேதான். பூண்டை நசுக்கிச் சேர்த்துப் பிசறி, எண்ணெயைக் காயவைத்து, ஒற்றை ஒற்றையாக உதிர்த்து விடுங்கள். மொறுமொறுவென வெந்ததும் எடுத்து, சுடச் சுட பரிமாறுங்கள்.

பேபிகார்ன் பஜ்ஜி

தேவையானவை:

பேபிகார்ன் 12, கடலை மாவு 1 கப், அரிசிமாவு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளவர் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவைக்கு, ஆப்ப சோடா சிட்டிகை
அரைக்க: பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல்.

செய்முறை:

பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள். மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

முந்திரி பக்கோடா

தேவையானவை:

முந்திரிப்பருப்பு 100 கிராம், கடலை மாவு 1 கப், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் நீங்கலாக, மீதி எல்லாப் பொருட்களையும் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். பிசறிய கலவையில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் உதிர்த்துவிடுங்கள். நடுத்தரத் தீயில் வேகவிடுங்கள். இல்லையெனில், முந்திரிப்பருப்பு கருகிவிடும்.

பனீர் பஜ்ஜி

தேவையானவை:

பனீர் 200 கிராம், கடலை மாவு 1 கப், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.
பொடிக்க: சீரகம் அரை டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன், கருப்பு உப்பு கால் டீஸ்பூன்.

செய்முறை:

பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காயவைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்.

ஸ்டஃப்டு குடமிளகாய்

தேவையானவை:

குடமிளகாய் 2, கடலை மாவு ஒன்றேகால் கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: பெரிய வெங்காயம் 2, மல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். அதனுடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, சீரகம் சேர்த்து பிசறுங்கள். இதுதான் ஸ்டஃப் செய்வதற்கான கலவை.
பிறகு, குடமிளகாயைக் கழுவித் துடைத்து, உள்ளிருக்கும் விதை நீக்கி, நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். மாவுடன் பெருங்காயத்தூள், மிளகாய்தூள், ஆப்ப சோடா, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து குடமிளகாய் துண்டுகளை, கரைத்த மாவில் நனைத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள். வெந்ததும் எடுத்து, நடுவில் லேசாக கீறி, வெங்காயக் கலவையை அதனுள் அடைத்து சூடாகப் பரிமாறுங்கள்.

ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி

தேவையானவை:

பிரெட் 4 ஸ்லைஸ், கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் 2, மல்லித்தழை சிறிது, எண்ணெய் தேவையான அளவு.
பச்சை சட்னிக்கு: புதினா அரை கப், மல்லி அரை கப், பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழச் சாறு 1, உப்பு சுவைக்கேற்ப.
கார (சிவப்பு) சட்னிக்கு: காய்ந்த மிளகாய் 6, பூண்டு 3 பல், வெல்லம் 1 டீஸ்பூன், புளி சிறிய துண்டு, உப்பு சுவைக்கேற்ப.

செய்முறை:

சட்னிகள் இரண்டையும் தனிதனியே நைஸாக அரையுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டுங்கள். குறுக்காக வெட்டி முக்கோண துண்டுகளாக்குங்கள். ஒரு துண்டின் மேல் பச்சை சட்னி, மற்றொன்றின் மேல் கார சட்னி தடவுங்கள். கடலை மாவு முதல் ஆப்ப சோடா வரை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். சட்னி (பச்சை) தடவிய பிரெட் ஸ்லைஸின் மேல் சிறிது வெங்காயம், மல்லித்தழை தூவி கார சட்னி ஸ்லைஸால் மூடுங்கள். எண்ணெயை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

கார்ன் பக்கோடா

தேவையானவை:

பேபிகார்ன் 10, கடலை மாவு முக்கால் கப், கார்ன்ஃப்ளவர் 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப.
அரைக்க: பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4 பல்.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சற்றுக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பேபிகார்னை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயைக் காயவைத்து, சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். புதுமையான, சுவையான பக்கோடா இது.

புடலங்காய் பஜ்ஜி

தேவையானவை:

புடலங்காய் (சிறியதாக) 2 , கடலை மாவு ஒன்றரை கப், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: உருளைக்கிழங்கு 2, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து மசியுங்கள். வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். புடலங்காயை கழுவி, வட்டமாக சிறு துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டெடுங்கள். அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடையுங்கள். கடலை மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கரையுங்கள். மிதமான தீயில் எண்ணையைக் காய வைத்து, புடலங்காய் துண்டுகளை மாவில் போட்டெடுத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

கீரை பக்கோடா

தேவையானவை:

ஏதாவது ஒரு கீரை 1 கட்டு, கடலை மாவு 1 கப், பச்சை மிளகாய் இஞ்சி விழுது 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி (விரும்பினால்) 1 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய்
தேவையான அளவு.

செய்முறை:

கீரையைப் பொடியாக நறுக்கி, அலசி, ஒரு துணியில் பரவினாற் போல போட்டு காயவிடுங்கள். மாவுடன், கீரை, உப்பு, சீரகம் சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். மாவில் தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டி அல்லது கிள்ளிப் போட்டு எடுங்கள். சத்துமிக்க, மாலைநேர டிபன் இது.

ஸ்டஃப்டு சில்லி பஜ்ஜி

தேவையானவை:

பஜ்ஜி மிளகாய் 6, கடலை மாவு முக்கால் கப், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: துருவிய வெள்ளரி கால் கப், துருவிய வெங்காயம் கால் கப், துருவிய தேங்காய் 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை 1 டேபிள்ஸ்பூன், முளைப்பயறு 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன் (அல்லது) மாங்காய் தூள் 1 டீஸ்பூன், சீரகத்தூள் 1 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில், ஸ்டஃப் செய்வதற்கான பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து பிசறிக்கொள்ளுங்கள்.
பிறகு, மிளகாய்களை கழுவி, லேசாக நீளவாக்கில் கீறி, உள்ளிருக்கும் விதைகளை கவனமாக நீக்குங்கள். பிசறி வைத்திருக்கும் காய்கறி கலவையை மிளகாயினுள் நிரப்புங்கள். கடலை மாவு, ஆப்ப சோடா, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய்களை மாவில் போட்டெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
(குறிப்பு: பஜ்ஜி மிளகாய் கிடைக்காதவர்கள், சற்று வெளிர் பச்சை நிறத்தில், பெரிய சைஸில் இருக்கு பச்சை மிளகாய்களை உபயோகிக்கலாம். அதில் விதையும் காரமும் குறைவாக இருக்கும்).

வெங்காய பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு 1 கப், பெரிய வெங்காயம் 4, சீரகம் அரை டீஸ்பூன், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை தோல்நீக்கி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாவுடன் சீரகம், மிளகாய்தூள், உப்பு, ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரையுங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து, வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசறி, எண்ணெயை நன்கு காயவைத்து, சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு, பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.

மிளகாய் பூரண பஜ்ஜி

தேவையானவை:

பஜ்ஜி மிளகாய் 6, கடலை மாவு முக்கால் கப், மிளகாய் தூள் அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், ஆப்ப சோடா அரை சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.
பூரணத்துக்கு: கடலை மாவு அரை கப், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் அரை டீஸ்பூன் (அல்லது) எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா தூள் 1 சிட்டிகை, சீரகத்தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் பூரணம் தயாரித்துக் கொள்ளவேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, குறைந்த தீயில் கடலை மாவை வறுத்துக்கொள்ளுங்கள். நிறம் மாறி வாசனை வந்ததும் இறக்கி ஆறவிட்டு, அதனுடன் பூரணத்துக்கான மற்ற பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஆறவிடுங்கள்.
மிளகாய்களை சுத்தம் செய்து, லேசாக நீளவாக்கில் கீறி, உள்ளே இருக்கும் விதைகளை கவனமாக நீக்குங்கள். அதனுள், கடலை மாவு பூரணத்தை நன்கு நிரப்புங்கள். பிறகு, பஜ்ஜிக்கான கடலை மாவு, ஆப்ப சோடா, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பூரணம் நிரப்பப்பட்ட மிளகாய்களை மாவில் நனைத்தெடுத்து, எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.

பிரெட் பக்கோடா

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் 2, கடலை மாவு முக்கால் கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, பூண்டு 4 பல், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிது, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பிரெட், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். கடலை மாவில் போட்டு, உப்பையும் சேர்த்து பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவில் சிறிது தண்ணீர் தெளித்து அழுத்திப் பிசைந்து, சிறு பக்கோடாக்களாக உதிர்த்துவிடுங்கள். நன்கு வேக விட்டெடுங்கள்.

காய்கறி பஜ்ஜி

தேவையானவை:

கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் 1 டேபிள்ஸ்பூன். காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்) ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருட்களை ஒன்றாகப் பிசறுங்கள். எண்ணெயைக் காய வைத்து, அந்த எண்ணெயிலிருந்து, ஒரு குழி கரண்டி அளவுக்கு எடுத்து, மாவில் சேருங்கள். இட்லி மாவை விட சற்று கெட்டியாக கரையுங்கள். சிறிது சிறிதாக காயும் எண்னெயில் ஊற்றுங்கள். நன்கு வெகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.

பாகற்காய் பக்கோடா

தேவையானவை:

பாகற்காய் (நடுத்தரமான அளவில்) 2, கடலை மாவு அரை கப், அரிசி மாவு அரை கப், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

பாகற்காயைக் கழுவித் துடைத்து, மெல்லிய வட்டங்களாக நறுக்கி, விதைகளை நீக்குங்கள். கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை பாகற்காயுடன் சேர்த்துப் பிசறிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கலவையில் மேலும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் போட்டு மித மான தீயில் பொரித் தெடுங்கள்.
எண்ணெய் அதிகமாகக் காய்ந்தால், பாகற்காய் கருகிவிடும். எனவே தீயைக் குறைத்துவைத்து வேகவிடுங்கள். கசப்பு தெரியாத, கரகரப்பான பக்கோடா இது.

காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையானவை:

காலிஃப்ளவர் 1, கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப.

செய்முறை:

மாவுடன் கார்ன்ஃப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியான பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, அலசி, உப்பு கலந்த கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டெடுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். காலிஃப்ளவரை சிறிது சிறிதாக மாவில் போட்டெடுத்து எண்ணெயில் தூவினாற்போல் போட்டு, வேகவிட்டு எடுங்கள்.

நேந்திரம் சிப்ஸ் 


தேவையானவை:

நேந்திரங்காய் 2, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையானது, தேங்காய் எண்ணெய் பொரிக்கத் தேவையானது.

செய்முறை:

நேந்திரங்காய்களை வாழைப்பழம் உரிப்பது போல் உரித்து தோலை நீக்குங்கள். மஞ்சள்தூள், உப்பை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து நேந்திரங்காய்களை நேரடியாக எண்ணெயில் சீவி விடுங்கள். நன்கு வெந்து எடுக்கும் சமயம் உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரை சிறிது எண்ணெயில் தெளித்து, படபடவென்று பொரிந்து அடங்கியதும் சிப்ஸை அரித்தெடுங்கள்.

இலை அடை - பூரணக் கொழுக்கட்டை..?? 




தேவையானவை:

பச்சரிசி மாவு 1 கப், உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் அல்லது நெய் 1 டேபிள்ஸ்பூன்.

பூரணத்துக்கு: தேங்காய் துருவல் (அழுத்தி அளந்தது) அரை கப், வெல்லம் (பொடித்தது) அரை கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன்.

செய்முறை :

பச்சரிசி மாவை, உப்பு, கொதிக்கும் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டுங்கள். வடிகட்டிய வெல்லப்பாகில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஒரு வாழையிலையை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். ஒவ்வொரு இலைத் துண்டிலும் சிறிது மாவு வைத்து, மெல்லிய அடையாக தட்டி, நடுவில் பூரணம் வைத்து இலையோடு மடித்து, இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.
ஒருமுறை சாப்பிட்டால் அந்த மணமும் ருசியும் உங்கள் நாவிலும் மனசிலும் தங்கிவிடும்.

பருப்பு பிரதமன் 

தேவையானவை:

பாசிப்பருப்பு அரை கப், அரிசி ரவை 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (பொடித்தது) 1 கப், முதல் தேங்காய்ப்பால் (கெட்டியானது) 1 கப், இரண்டாம் தேங்காய்ப் பால் 1 கப்,\ ஏலக் காய்தூள் 1 டீஸ்பூன், நெய் 1 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

பருப்பை வாசனை வரும்வரை வறுத்து, வேகவிடுங்கள். அதனுடன் ரவையையும் சேர்த்து வேகவிடுங்கள். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, வெந்த பருப்பில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இரண்டாவது தேங்காய்ப்பாலை சேருங்கள். 5 நிமிடம் கொதிக்கவிட்டு, முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். ஏலக்காய்தூள், நெய் சேர்த்து பரிமாறுங்கள். கேரள மாநிலத்தவரின் ஃபேவரிட் பாயசங்களில் இதுவும் ஒன்று.


வடுமாங்காய் - நாக்கு ஊறுதுங்கோ 

அரைக்காமல் கொள்ளாமல் செய்யக் கூடிய, ஒரு வருடத்துக்கு வைத்துக்கொள்வது போல ஒரு சூப்பரான வடுமாங்காய் ஊறுகாய் இருக்கிறது.

ஐந்து கப் உருண்டை மாவடுவை கழுவித் துடைத்து, அரைமணி நேரம் நிழலில் உலரவிடுங்கள். ஒரு கப் கல் உப்பை எடுத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். (தூள் உப்பாக இருந்தால் முக்கால் கப் போதும்). மாவடுவுடன் பொடித்த உப்பைச் சேர்த்து பிசறி, ஒரு ஜாடியில் போட்டு மூடிவையுங்கள். மறுநாள் நன்கு குலுக்கிவிடுங்கள். மூன்றாம் நாள், வடு தண்ணீர் விட்டிருக்கும். மீண்டும் நன்கு கிளறி மூடிவையுங்கள்.

நான்காம் நாள், உப்பு நீரிலிருந்து வடுக்களை எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில், போட்டுவைத்துவிட்டு, ஒரு கரண்டியால் உப்பு நீரை நன்கு கலக்குங்கள். (கரையாமல் இருக்கும் உப்பும் கரைந்துவிடும்). ஒரு மெல்லிய, சுத்தமான துணியால் வடிகட்டுங்கள். அந்த நீரில் அரை கப் மிளகாய்தூளையும் கால் கப் கடுகுத்தூளையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பிறகு, அதனுடன் வடுவையும் சேர்த்துக் கலந்து ஒரு ஜாடியில் போட்டு, மூடிவையுங்கள். அவ்வளவுதான்!

ஊறுகாய் எவ்வளவு நாளானாலும் அப்படியே இருக்கும். மேலே ஏடு படியாது. இந்த முறைக்கு விளக் கெண்ணெய், மஞ்சள்தூள் தேவை இல்லை.’’

வேப்பம்பூ பச்சடி 

தேவை:

பச்சை (புதிய) வேப்பம்பூ 1 கப், வெல்லத்தூள் 1 கப், புளி கரைத்த தண்ணீர் 1 கப், உப்பு சிறிதளவு, காய்ந்த மிளகாய் 3, கடுகு கால் டீஸ்பூன், நெய் அரை டீஸ்பூன்.

செய்முறை:

புளி கரைத்த தண்ணீரை உப்பு போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, பின் வெல்லம் போட்டுக் கொதிக்க விட வும். சற்று பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டிக் கலக்கவும். இப்போது பச்சடியில் உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்த்தாயிற்று.
கைப்பு (கசப்பு), துவர்ப்பு இரு சுவையும் உடைய வேப்பம்பூவை புதிதாக பறித்து வந்து, வாணலியில் போட்டு அடுப்பை நிழல் போல் எரியவிட்டு, மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுக்கவும். அவசரப்படாமல், நிதானமாக வறுக்கவும். பிறகு, அதை மிக்ஸியில் பொடிக்கவும். அப்பளக் கல்லில் வைத்து குழவியால் கூட பொடிக்கலாம். பொடித்த பூவை பச்சடியில் தூவவும். உடனே பரிமாறவும். அறுசுவை ருசியோடு வேப்பம்பூ பொடியும் மொறுமொறுப்பாக வாயில் அகப்படும். தமிழ் வருடப் பிறப்பன்று அறுசுவையோடு சாப்பிடவேண்டும் என்பதற்காக இந்த பச்சடியை செய்வார்கள். உடம்புக்கும் மிக மிக நல்லது.
பூவைப் பச்சையாகப் போட்டால் அதன் சத்து அப்படியே கிடைக்கும். பச்சைப் பூ கிடைக்காவிட்டால், காய்ந்த வேப்பம்பூவை வறுத்துப் போடலாம். பூவை நன்கு கருக வறுக்காவிட்டால், பச்சடி கசந்துவிடும்.

முருங்கைக் கீரை தொக்கு 


தேவையானவை:

முருங்கை கீரை 2 கப், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, புளி நெல்லிக்காய் அளவு, எண்ணெய் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம் (விருப்பப்பட்டால்) துளியளவு.

செய்முறை:

முருங்கைக் கீரையை சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். பிறகு, அந்த எண்ணெயிலேயே, கீரையை போட்டு வதக்கி எடுக்கவும். மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும். தயிர் சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகிய உணவுகளுக்கு அருமையான சைட்டிஷ் இது. முருங்கை கீரை பிடிக்காத பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தண்ணீர் விடாமல் பொடி போலவும் அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், சிறிது தண்ணீர் விட்டு அரைத்தால்தான், எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள சுவையான தொக்கு கிடைக்கும்.

கோவா சீஸ் ஜாமூன் 


தேவையானவை:

கோவா (பாலை சுண்டக் காய்ச்சி எடுத்தது) ஒரு கப், சீஸ் (துருவியது) அரை கப், மைதா மாவு முக்கால் கப், சர்க்கரை 5 கப், சோடாமாவு ஒரு சிட்டிகை, கடலை எண்ணெய் இரண்டரை கப், ஏலப்பொடி ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை.

செய்முறை:

பால்கோவாவை நன்கு உதிர்த்துத் தேய்த்து மிருதுவாக்கிக் கொள்ளவும். சீஸையும் தேய்த்து மிருதுவாக்கிக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் மைதா மாவையும் சேர்த்து நன்கு பிசையவும். ஜாமூன் உருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையில் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு, கெட்டியாக இல்லாமல் ஜீரா தயார் செய்யவும். ஏலப்பொடி, கேசரி பவுடர் சேர்த்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஜாமூன் உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஜீராவில் போடவும். செய்வதற்கும் சுலபம். சாப்பிடுவதற்கும் புதுச் சுவையாக இருக்கும்.
சாதாரண ஜாமூன், ஜீராவில் சிறிது கரையும். இந்த ஜாமூன் கரையாமல், உருண்டையாக அப்படியே இருக்கிறது. சீஸ் போடுவதால் மாவுக் கலவை சற்று இளகுவது போலிருந்தால், மைதாவை கொஞ்சம் ஜாஸ்தி சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

Thursday, April 06, 2006

வயதானவர்களுக்கான உணவுகள் 



நன்றி: பத்மா அர்விந்த

நாள்தோறும் நாம் சற்றே முதுமை அடைந்து கொண்டிருக்கிறோம். வளர்ச்சி நின்றுபோய் முதுமை தொடங்கும் காலம் நடுவயதுக்காலம். நாம் உணர்ந்தோ உணராமலோ நமது உறுப்புகள் கூட முதுமையும் தளார்ச்சியும் அடைகின்றன.60 வயதிற்கு பின் செரிமான மண்டலம் முன்போல சீரண என்சைம்களை சுரப்பதில்லை. பற்கள் நன்றாக கடித்து உமிழ்நீருடன் சேர்த்து சீரணிக்க முடிவதில்லை. சாப்பிடுவதுகூட ஒரு சீரான காலத்தில் முடியாவிட்டால் செரிக்க தடுமாறுகிறது. ஆனால் இளமையில் இருப்பவர்களுக்கு இது புரிந்து கொள்வது கஷ்டம்.சமீபத்தில் உடற்பயிற்சி கூட்டத்தில் ஒரு முதாட்டி நடப்பதும் கார் கதவுகலாஇ திறக்க கூட தான் படும் சிரமங்களை சொன்ன போது, நாம் இதை எல்லாம் எண்ணிப்பார்க்கவே தவறிவிடுகிறோம் என்பது புரிகிறது. சின்ன செயல்கள் கூட குழந்தையை போல கடுமையாகி விடுகிறது.

இரண்டு மூட்டை அரிசியை அனாயாசமாக தூக்கி போட்ட அப்பாவால் இப்போது ஒவ்வொரு படியாக ஏறுவதே கஷ்டமாக இருக்கிறது. சின்ன குழந்தையைபோல படிப்படியாக பிடித்துக்கொண்டு நடப்பதை பார்க்கும் போது முதுமை சில சமயம் கொடுமையானதென்றே தோன்றுகிறது.
சீக்கிரமே இரவுகளில் உண்டு உறங்கிவிடுவதும், அதிகாலையில் விழிப்பு வந்து தூக்கம் வராமல் தவிப்பதுமாய் முதியவர்கள் அல்லல் படுவதை பார்த்தால், அவர்களுடன் பொறுமையாக இல்லாமல் கடிந்து கொள்ளும் பிள்ளைகளை கண்டால் இன்னும் கோபம் வருகிறது.சிலருக்கு சாதம் பருக்கைகள் கூட குழைந்து இருந்தால் மட்டுமே உன்ண முடியும்.தனியாக இருக்கும் முதியவர்களுக்கு சமையல் செய்யும் போது மறதி வருவதும், அடுப்பில் உணவுவகககள் தீய்ந்து போவதும், இன்னும் மர வீடுகளில் இது நெருப்பு பிடிக்கும் அபாயம் இருப்பதும் கண்கூடு.

அமெரிக்காவில் முதியவர்கள் விரும்பினால் அவர்கள் வீட்டிற்கே சென்று உணவை மூன்று வேளையும் உணவு தருகிறார்கள்.குறிப்பிட்ட வருமானத்திற்கு மேலாக இருந்தால் சதவிகித அ டிப்படையில் பணம் கட்டினால் போதுமானது. இது அரசாங்கம் ஏற்று நடத்தும் திட்டம் என்பதால் குறைந்த சகாய விலையில் நல்ல தரமான உணவாக தயாரிக்க படுகிறது. மேலும் பெயரை கொடுத்து பதிவு செய்யும் போது அவரவர் மருத்துவர் சான்றிதழும் பெற்றுக்கொள்ளப்படுவதால் நீரிழிவு நோய் இருந்தால் அதற்கேற்ற முறையிலும் உணவு வழங்கப்படுகிறது.இதற்கான புதிய திட்டம், கொள்கை மாற்றம் செய்யப்படும் மாநில அளவிலான குழுவில் நானும் ஒரு முக்கிய அங்கத்தினர் என்பதால் உங்கள் அனைவரிடமிருந்தும் சில கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

இப்போது அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் பலர். குறிப்பாக எடிசன் போன்ற நகரங்களில் இந்தியர்கள் மக்கள் தொகையில் 24% ஆகும். நாம் முதுமை அடைந்தால், ஏற்கெனவே முதுமை அடைந்தவர்களுக்கு அமெரிக்க உணவுவகைகள் பொறுத்தமாக இருக்காது. ஆனால், இந்தியர்கள் சுவைக்கேற்ப உணவு தயாரித்து அனுப்ப வேண்டுமானால் எததகைய உணவுகள் முதியவ்ர்களுக்கு பொறுத்தமாக இருக்கும்? மேலும் குளிர்காலத்தில் எடுத்து செல்லப்படும் உணவு நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்க என்ன செய்ய வேண்டும்? குளிர் பதனப்படுத்தப்பட்ட சாண்ட்விச்கள் ஈடாக நாம் என்ன செய்ய முடியும்? சூப் போன்றவை அனைவராலும் விரும்பி அருந்த முடியுமா? அதற்கு ஈடாக என்ன செய்ய முடியும்? அப்படி செய்ய முடியுமானாலும் எப்படி சமையல் செய்பவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது போன்றவை பற்றியும் இன்னும் நான் குறிப்பிடாமல் விட்ட சில உணர்வு பூர்வமான கலாசாரம் சார்ந்த விஷயங்கள் இருப்பினும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். உணவுவைகள் எளிதில் நிறைய பேருக்கு செய்ய கூடியதாகவும், நீண்ட நேரம் கெடாமல் இருப்பதாகவும் இருந்தால் நல்லது.

பச்சை காய்கறிகள் சேர்த்து கொள்பவர்களுக்கு எந்தவகையில் சாலட் செய்தால் பொறுத்தமாக இருக்கும்? இங்கே அமெரிக்காவில் சாலட் என்றாலே பெரும்பாலும் அது லெட்டஸ் போட்டதுதான். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் அதையும் சேர்த்துக்கொள்ள முடியும். ஏப்ரல் 11 ஆம் தேதி இதற்கான இரண்டாவது திட்டக்குழு கூட இருக்கிறது.


1. Dubukku - April 5, 2006

ஜவ்வரிசிக்/அரிசிக் குருணைக் கஞ்சி, அப்பளம் ஆகியவற்றை பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சூப்புக்கு பதிலாக இவை செல்லுபடியாகுமா தெரியவில்லை. பாலை தனியாக வேண்டும் பொழுது கலந்துகொண்டால் கெடாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்….
இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றையும் பதப்படுத்தி கெடாமல் கொடுக்கலாமே?
just my 2p worth.

2. Jayashree - April 5, 2006

my 2 cents worth …..
பொதுவாக வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உணவுமுறைகள் வேறுபட்டு இருக்கிறது. எனவே அரிசியாலான உணவு வகைகளும், கோதுமையாலான உணவு வகைகளும் சம அளவில் இருக்கலாம்.
கோதுமை ரவை (cream of wheat) நீரிழிவு நோயாளிகளுக்கும் மற்றும் எல்லா வயதானவர்களுக்கும் எளிதில் செரிக்கக்கூடிய உணவு. அவரவர் தேவைக்கேற்ப திட உணவாகவோ அல்லது கஞ்சி போன்றோ தயாரிக்கலாம். இரவு உணவுக்கு மிகவும் எற்றது.

காய்கறிகளுடன், பருப்பு (lentils) சேர்த்து இந்திய சுவைக்கேற்றதுபோல் spices சேர்த்து சூப் தயாரிக்கலாம். முழு உணவாகவோ அல்லது sidedish ஆகவோ
இட்லி பொதுவாக எல்லாராலும் விரும்பப்படும் உணவு. டோக்ளாவும் இதைப்போலவே. இரண்டையும் freeze செய்தும் உபயோகிக்கலாம். வயதானவர்களுக்கு ஏற்றது. பருப்பும் அரிசியும் சேர்த்து செய்யப்படும் கிச்சடி.
மிருதுவான மெல்வதற்கு எளிதான சப்பாத்தி. Dhal. வேகவைத்து மிதமான காரம் சேர்த்த காய்கறிகள். வெள்ளரி, கேரட், முதலியவற்றை துறுவியோ, பொடியாக நறுக்கியோ, எலுமிச்சை சாறு, சிறிதளவு மிளகு சேர்க்கப்பட்ட சாலட் வகைகள். கீரைகளை வேகவைத்து மசித்த சாக் போன்றவை ( இரவில் செரிப்பது கடினம்). மேலும் பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவற்றை காய்கறிகள் சேர்த்து இந்தியர்கள் சுவைக்கேற்ப சமைக்கலாம். இதுபோல உணவுவகைகளைப் பட்டியலிட்டு, பின் மெனு தயாரிக்கும்போது எல்லாருடைய தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.


3. துளசி கோபால் - April 5, 2006

பத்மா,

வயசாயிட்டா நாக்கு கொஞ்சம் அலையும்தான். முதுமைவரவர, குழந்தைகளா ஆயிடறதும் இதனாலேதான்.ரசம் சாதம் பலபேர் விரும்பிச் சாப்புடறதை பார்த்துருக்கேன். சீரணமும் ஆயிரும். மைக்ரோவ்லே சூடாக்கிக்கறமாதிரி, சின்னச்சின்ன கப்களிலே கொஞ்சம் பருப்பு, தயிர், ரசம், எதாவது ஒரு காய் இருந்தாவே யதேஷ்டம்.

இட்டிலியும் அருமைதான்.இடியாப்பம்கூட இப்படி ஃப்ரீஸ் செஞ்சுக்கலாம். சுடவச்சா வித்தியாசமே தெரியாது.அரிசி உப்புமா கூட நல்லதுதான். மிளகு, சீரகம் சேர்த்துச் செய்யலாம். வெண்பொங்கல், நல்லா குழைவா இருந்தாஅவுங்களுக்கு ரொம்ப இதமா இறங்கும். பல் சரியா இல்லேன்னா சப்பாத்தி சாப்புடறது கஷ்டம்தான்.

ரொம்ப ஸ்பைஸ் இல்லாம சமைக்கணும். தென்னிந்தியர்கள்ன்னா புளிக்குழம்பு, வெந்தியக்குழம்பு வாரம் ஒரு நாள்கொஞ்சமா (நாலு டேபிள் ஸ்பூன் போதும்) கொடுக்கலாம். இன்னும் ஞாபகம் வந்தா எழுதறேன்.

பி.கு: இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் கிழவியானப்புறம் இந்தியாவிலே முதியோர்கள் இல்லத்துலே சேர்ந்துடலாமான்னுஒரு யோசனை. அட்லீஸ்ட் ஒரு ரசஞ்சாதம் கிடைக்குமே!

4. Aruna Srinivasan - April 6, 2006

காலையில் 6 / 6. 30 மணி அளவில் காபி. இரண்டு மாரி பிஸ்கட்.
8 மணி அளவில் - சாம்பார் / சட்னி - இட்லி / தோசை / ( ஒரு wet grinder மட்டும் இருந்து விட்டால் பாதிப் பிரச்சனை தீர்ந்தது. அங்கேயே கிடைக்கிறது என்று நினைக்கிறேன். ஹ்ம்ம்.. ஆனால் குளிர் நாளில் லேசில் புளிக்காது. ரூம் ஹீடர் சூட்டில் / அல்லது கம்பளி துணி சுற்றிய கதகதப்பில், எப்படியும் இரண்டு நாளில் ஈஸ்ட் உருவாகாதா? ) கோதுமை ரவை உப்புமா / ரவா இட்லி ( இந்தியக் கடைகளில் கிடைக்கிறது) பொங்கல் ( குழைய, அதிகம் நெய்யில்லாமல்) - கொத்சு.

12 / 1 மணி அளவில் - சாதம் / சாம்பார். (பிசைந்து கொள்ள மேலும் வகைகள் - காரமில்லாமல் வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, மசியல் போன்றவை) பொறியல் ( எல்லா பச்சைக்காய்கறிகளூம் ) சாலட்டுக்கு - வெள்ளரிக்காய் /தக்காளி / காரட் வெகு மெல்லிசாக சீவினது. தேவையென்றால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றலாம் - பாதகமில்லை. ( பல்லில்லாதவர்கள் சாப்பிட ஏதுவாக). தயிர்.
4 மணிக்கு சத்துமாவு கஞ்சி அல்லது ஹார்லிக்ஸ் - பிஸ்கெட் ( அல்லது கொழுப்பு அதிகம் இராத cookies) ( அல்லது முடிந்தால் ஒரு தோசை!!) ஒரு பழம்.

7 மணிக்கு - சப்பாத்தி - பயத்தம்பருப்பு கூட்டு / அல்லது சாதம் - ரசம் / பொறியல் - தயிர்

சத்துமாவு கஞ்சி. இப்போதெல்லாம் இந்தியாவில் பலவித பிராண்டுகள் கிடைக்கின்றன. மொத்தமாக தருவித்துக்கொள்ளலாம். அரைக்க வசதியிருந்தால் - கம்பு, கேழ்வரகு, சோளம், புழுங்கலரிசி, கோதுமை, பயறு, மக்காச்சோளம், கொள்ளு, ஜவ்வரிசி, பார்லி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, கொத்துக்கடலை, காராமணி, சோயா, பலவித தான்யங்கள் ஒவ்வொன்றும் 100 கிராம் அளவில் போட்டு வறுத்துவிட்டு இவற்றுடன் முந்திரி, பாதாம் ஏலக்காய் போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு ஸ்பூன் மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து அடுப்பில் ஏற்றி கூழாக வரும் வரை கிளரி, இறக்கி பாலோ அல்லது மோரோ - விருப்பப்படி சேர்க்க வேண்டும். தயாரித்து பிளாஸ்கில் ஊற்றி எடுத்துச் செல்லலாம் பால் / சர்க்கரை சேர்த்தது என்றால். மோர் / பெருங்காயம் சேர்த்தது என்றால் சாதாரணமாக ஜூஸ் எடுத்துப் போகும் பாட்டில்.

பொதுவாக சூப்புக்கு பதிலாக நிறையத் தக்காளி போட்டு ரசம். ( பருப்பு விழுதுக்கு பதிலாக வேகவைத்த பருப்பின் நீர் மட்டும் போது. மிளகு, சீரகம் - இவை அதிகம் இல்லாமல். முடிந்தால் அந்த ரசத்திலேயே காய்கறிகள் வேகவிட்ட நீரையும் சேர்க்கலாம். கூடுதல் சத்துக்கு. பிரெட்டுக்கு பதிலாக இட்லி / தோசை / டோக்ளா வகையறாக்கள். - கார்போஹைடிரேட்


காய்கறிகள்: பொறியல் மற்றும் சாலட்.சாலட்டுக்கு - வெள்ளரி, தக்காளி, காரட் கோஸ்மல்லி வகைகள் அல்லது வெள்ளரிக்காய் / தக்காளி தயிர் பச்சடி.
நடுவில் எங்காவது filling வேண்டுமென்றால் மெனுவில் நன்றாக வேகவைத்த சுண்டல் சேர்த்துக்கொள்ளலாம் - புரோட்டினுக்கு தயிரும் இருக்கே.
தொண்டூழியம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒருவர் என்று முறை வைத்துக்கொண்டு தயாரித்து கொண்டுபோய் கொடுக்கலாம்.
ரசம் போன்ற நீர் பதார்த்தங்களை பெரிய பிளாஸ்க்குகளில் எடுத்துச் செல்லலாம்.

இட்லி, / சாதம்/ பொறியல் போன்ற திடப்பதார்த்தங்கள் நம்ம ஊரில் சாதாரணமாக ஹாட்பேக்கில் மூன்று மணி நேரம் சூடாக இருக்கும். ஆனால் உங்க ஊர் குளிரில்….?!! நீங்கள் சூடாக வைக்க வீட்டுக்கு செய்யும் முறையையே பெரிய அளவில் செய்து பார்க்கலாம். அல்லது கொண்டுபோய் கொடுப்பவர்கள் ( delivery people) மைக்ரோவேவில் சூடு படுத்தி ஹாட் பேக்கில் வைத்துவிட்டு போகலாம். இன்னும் யோசித்து எழுதுகிறேன் பத்மா.

5. thyag - April 6, 2006

முதியவர்களுக்கு காலை,மதியம்,இரவு என்ற வழக்கமான மூன்று முறை - செறிமானத்திற்கு அவ்வளவாக நல்லதல்ல.அதற்கு பதிலாக அதே அளவு உணவை ஐந்து முறையாக (3 மணி நேர இடைவெளியில்) உட்கொண்டால் எளிதாக ஜீரணமாகும். இது எனது தந்தைக்கு மருத்துவர் சொல்லியுள்ள பொதுவான அறிவுரை.

6. karthikramas - April 6, 2006

பதமா,பொதுவாக வயதானவர்களின் பிரச்சினை அல்லது வயாதானால் வரும் பிரச்சினை ஜீரணம் சார்ந்தது ஆகையால் எளிதில் ஜீரணம் ஆகும் பண்டங்கள் கொடுப்பது அவசியம்.
1) சாதம், இட்லி போன்றவை முதன்மைப்பண்டங்களாக இருக்கலாம்.2) மாரி பிஸ்கட்3) மிகவும் நீராக இருக்கும் எதுவும் கொடுக்கலாம்.
மேலே அருணா சொன்னவற்றில் நான் சிலவற்றை தவிர்ப்பேன்.1)தோசை எண்ணெய் இருப்பதால் தவிர்க்கலாம், அல்லது எண்ணெய் குறைவாக சேர்த்து செய்து கொடுக்கலாம்.2) சத்துமாவு கஞ்சி கொடுத்தால் நீர்ப்பதமாய் கொடுக்கலாம்.

தியாகு சொன்னது போல 5 வேளை அல்லது 7 வேளை என்று பிரித்து உண்பதையும் பல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

7. Partha - April 6, 2006

“One size fits all” உணவு நடைமுறைக்கு சரிவராது. இதற்கு மேல், அவரவர் வளர்ந்த இடம் பொறுத்து விருப்பமும் வேறுபடும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:1) உணவு “small portions” -ஆக இருப்பது முக்கியம்.2) காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும், அரிசி/கோதுமை குறைவாக இருக்க வேண்டும்.3) கலோரி ஒரு நாளுக்கு எவ்வளவு தேவை என்பதை பொறுத்து, portions பிரிக்கப்பட வேண்டும்4) பொறிக்கபடும்/வறுக்கப்படும் உணவுகள் அவனில் தயாரிக்கப்பட வேண்டும்.
உண்பவர்களின் ஆரோக்கியம்/நோய் பொறுத்து உணவுகளை வகைப்படுத்த வேண்டும்:உதா 1: வயதானவர்கள் பெரும்பாலும்/நிறைய பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் அதிகம் கார்போஹைட்ரேட் இல்லாத உணவாக இருப்பது அவசியம். காலையும் சர்க்கரை, மதியமும் சர்க்கரை என்பது சரிவராது.

காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும், அரிசி/கோதுமை குறைவாக இருக்க வேண்டும். கார்ப் உணவிலும், க்லைசிமிக் இன்டக்ஸ் குறைவாக உள்ள உணவாக இருக்க வேண்டும்.இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு நோய் இருக்கக்கூடும். அதனால் சில வகைப்படுத்துதல் முக்கியம்.1) உப்பு குறைவாக உள்ள உணவு2) சர்க்கரை/கார்ப் குறைவாக உள்ள உணவு3) காரம் குறைவாக உள்ள உணவு4) கொழுப்பு குறைவாக உள்ள உணவு

நீங்கள் கேட்ட கேள்வியை விட்டு விலகி சென்றுவிட்டேன். சில கருத்துக்கள் கீழே: (நான் சைவம் என்பதால் அசைவம் பற்றி அவ்வளவு தெரியாது. ஆனால், ஆட்டிறைச்சி நல்லதல்ல. கோழி வறுக்கபடாமல்/தோல் இல்லாமல் இருப்பது முக்கியம். மீன் வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் (மீனிலும் அதிகம் கொழுப்புள்ள மீன்கள் இருக்கின்றன: சால்மன், ட்யூனா போன்றவை)
1) இட்லி - புதினா சட்னி/தக்காளி சட்னி/காய்கறி சட்னி2) ராகி ரொட்டி3) பருப்பு சேர்த்த கூட்டு (முட்டைகோஸ், காலி ப்ளவர்,சௌ சௌ, சுரைக்காய்,கத்திரிக்காய் )4) பருப்பு - வட/தென்னிந்திய முறை. பல வகை கீரை சேர்த்தும் சமைக்கலாம்.5) முட்டைகோஸ் பொரியல்6) மோர்க்குழம்பு7) அவியல் (உருளை போன்ற காய்கறிகளை தவிர்க்கலாம்)8) முளைத்த பயிர் சாலட்/சுண்டல்9) கத்திரிக்காய் பொரியல் (தேங்காய், எள் சேர்க்காமல்)10) அதிகம் இனிப்பு/கொழுப்பு இல்லாத பிஸ்கட் (ஜூலியா மாரி?)11) அவல் உப்புமா12) ராகி கஞ்சி13) காலி ப்ளவர் - பட்டானி - வட/தென்னிந்திய முறை14) கீரை சேர்த்த சப்பாத்தி

This page is powered by Blogger. Isn't yours?